ரேபரேலியில் உள்ள பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையை, மாணவர்கள் நாற்காலியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் காந்தி சேவா நிகேதன் பள்ளி உள்ளது. இங்கு மம்தாதுபே என்பவர் குழந்தைகள் நல அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் திடீரென கூட்டமாக சேர்ந்து ஆசிரியை மம்தாதுபேவை சரமாரியாக தாக்கினர்.
அதில் ஒரு மாணவன் நாற்காலியை தூக்கி ஆசிரியை மீது வீசினார். மாணவர்களின் பிடியில் இருந்து மம்தாதுபே தப்பி வெளியே ஓடினார்.
மாணவர்கள் ஆசிரியையை தாக்கியது வகுப்பறையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
#WATCH A child welfare official, Mamata Dubey, was thrashed by students at Gandhi Sewa Niketan in Raebareli, yesterday. pic.twitter.com/ZCBGJeZ8Z3
— ANI UP (@ANINewsUP) 12 novembre 2019
வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கல்வி நிறுவனத்தின் மேலாளர் கூறும்போது, ஆசிரியை மம்தாதுபே மாணவர்களை ‘அனாதைகள்’ என திட்டி உள்ளார். அவர் வழக்கமாக மாணவர்களை திட்டிக் கொண்டேதான் இருப்பார். என்றார்.
ஆனால் மம்தா துபே இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
காந்தி சேவா நிகேதன் மேலாளர் என்னை தாக்குமாறு குழந்தைகளை தூண்டி உள்ளார். அவருக்கும், எனக்கும் ஏற்கனவே தகராறு இருந்தது. அவர் தான் மாணவர்களை தூண்டி விட்டுள்ளார்.
பள்ளி நிர்வாகம் என்னை முன்பு ஒரு முறை பணி நீக்கம் செய்தபோது, கலெக்டர் உதவியுடன் நான் மீண்டும் பணியமர்த்தப்பட்டேன். தற்போது கலெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் என்னை பணி நீக்கம் செய்ய மேலாளர் முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.